படித்தேன் பகிர்கிறேன் -3
நூலின் பெயர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பதிப்பாளர் - பாரி நிலையம்
விலை - ரூ. 50/-
பக்கம் - 126-128
முடிவு
எத்துறையும்
எனவே, சமணர்கள் எல்லாத் துறைகளிலும் தமிழை வளர்த்துத் தமிழை வாழச் செய்து தமிழ் ஆழத்தைத் தம்மைப் போல் பிறரும் அறியப் பெரிதும் உதவ முயன்றனர். அம் முயற்சியில் வெற்றி கண்டனர். இதில் யாரும் ஐயங்கொள்வதற்கில்லை. சிறந்த இலக்கண நூல்களில் பெரும்பான்மையானவை சமணர்கள் எழுதினவையேயாம். தொல்காப்பியம் சமண நூல் என உறுதி கூறமுடியாமற் போனாலும், சமணம் பரவிய காலத்தெழுந்த தமிழ் வழக்கிற்கே இலக்கணம் கூறுகிறதெனலாம். இறையனாரகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், பிரயோகவிவேகம் நீங்கிய மற்றைய இலக்கணப் பரப்பெல்லாம் சமணர் இட்ட பிச்சையே எனலாம். இவையும் சமண இலக்கணங்களின் துணைகொண்டு விளங்குவனவேயாம். பாட்டுக்களை எல்லாரும் ஒப்புக் கொள்ளும் வகையில் சீர் பிரிப்பதற்குப் பெருவழி ஒன்றை காட்டியவர் யாப்பருங்கலக்காரரே ஆவர். எழுத்து, சொல் ஆராய்ச்சியைச் சிறுவரும் கொண்டு விளையாடும் படியாகச் செய்தவர் நன்னூல் எழுதிய பவணந்தி ஆவர்.
நிகண்டிற்குக் கடைகாலிட்டுக் கோட்டை கட்டியவரெல்லாம் சமணர்களே ஆவர். மேனாட்டார் அகராதி தொடங்குமுன் சமணர் முயற்சியே சிறந்து விளங்கியது. இலக்கியத்தில் பழைய காப்பியங்கள், மணிமேகலை, குண்டலகேசி நீங்கலாக, வழங்கியவையெல்லாம் சமணக் காப்பியங்களே யாம். காப்பிய வழியினைக் கம்பர் முதலோர்க்குச் செவ்வனே அமைத்துத் தந்தவர்களும் அவர்களேயாம். வசனத்திலும் பழைய இலக்கியமாக நின்று நிலவுவது சமணரது ஸ்ரீபுராணம் ஒன்றேயாம். அறவழி நூல்களைச் செய்தவர்கள் பெரும் பான்மையிலும் சமணர். பிறர் எழுதிய அறநூல்களும் சமணர்களிட்ட அறநூல் திட்டத்தைப் பின்பற்றுவனவேயாம். திருவள்ளுவர் சமணர் அல்லர் என்று கொள்வோரும் சமண அடிப்படையாம் அருளறத்தின் மேலேதான் திருவள்ளுவர் எக்காலத்துக்கும் எந்நாட்டினர்க்கும் தக்கதானதொரு அறக்கோயிலை எழுப்பியுள்ளார் என்று ஒப்புக் கொள்ளுதல் வேண்டும். ஆதலின், எந்தத் துறையை நோக்கினாலும் சமணர் செய்த பேருதவியைத் தமிழர் எந்த நாளும் மறுப்பதற்கில்லை. இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டைய தமிழர்கள் நன்குணர்ந்து போற்றிவருகிறார்கள்.
- தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
4 comments:
உண்மைதான். ஆயினும் சமணர் என்றால் வடக்கிருந்து வந்தவர் என்ற எண்ணம் தோன்றுது. எனவே தமிழ்ச்சமணர் அலல்து சமணத்தமிழர்கள் என அடைமொழியிட்டு சொல்லலாம்
ஒவ்வொரு வார்த்தையும்
சத்திய வார்த்தைகள்!
ஒவ்வொரு சொல்லும்
உண்மையின் சொல்லே!
மிகவும் அக மகிழ்ந்தேன், தெ.பொ.மீ அவர்களின் ஆணித்தரமான வரிகளால்!
//தொல்காப்பியம் சமண நூல் என உறுதி கூறமுடியாமற் போனாலும், சமணம் பரவிய காலத்தெழுந்த தமிழ் வழக்கிற்கே இலக்கணம் கூறுகிறதெனலாம்//
முழுக்க ஒப்புக் கொள்ளவியலாது எனினும்..
தொல்காப்பியருக்குச் சமண நெறி இன்னது -ன்னு தெரிந்தேயுள்ளார்;
//திருவள்ளுவர் சமணர் அல்லர் என்று கொள்வோரும் சமண அடிப்படையாம் அருளறத்தின் மேலேதான் திருவள்ளுவர் எக்காலத்துக்கும் எந்நாட்டினர்க்கும் தக்கதானதொரு அறக்கோயிலை எழுப்பியுள்ளார் என்று ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்//
அமர்க் களமான வரிகள்! என் மனத்தை அப்படியே எதிரொளிப்பவை!
வள்ளுவர், தனிப்பட்ட அளவில், சமணராய் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்!
ஆனால் அது பற்றி நமக்குக் கவலையில்லை! அவர் நூல் = பொது மறையே! தமிழ் மறையே!
இன்னொரு முக்கியமான சமணத் தமிழ்ப் பெருமை.. விட்டுப் போய் விட்டது!
நான் சொல்லட்டுமா?:)
சமணம் & பெளத்தம்:
= இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
= ஆனா தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; ”புது நெறி”-ன்னே அறிமுகம் செய்தார்கள்!
* தமிழ்ப் பழங்குடிகளின் கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை;
* சம்ஸ்கிருத நெறி தான் கந்தனை->ஸ்கந்தன் ஆக்கியது!
சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு!
தொன்மத்தின் மேலேயே ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?-ன்னே கண்டுபுடிக்க முடியாதே?:(
= Thatz the Trick! Ir-reversible:(
இப்படி ஆனதே, நடுகல் முருகனுக்கு = 6 தலை, 12 கை:)
இயற்கை வழிபாடு போய்...
புராணக் கதைகள், ஹோம/ யாக பரிகாரங்கள் பெருகியது!
இன்னிக்கி நாமளும், ஆறு-தலை/ தரும் ஆறுதலை -ன்னு… Rhymingஆ “வார்த்தை விளையாட்டு” பண்ணி, மன மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வேறென்ன செய்ய முடியும்?:((
---------
போலியான கதைகள்/ பிரசார உத்திகள்/ செத்த பெண்ணை, பல வருசம் கழிச்சி, வளர்ந்த வயதில் எழுப்புதல் போன்ற கட்டுக் கதைகள் சமணத்தில் இல்லை! அதான் போலும் அதிக வளர்ச்சியும் இல்லை:))
நாம தப்பே செஞ்சிருந்தாலும், "பரிகாரம்" பண்ணிக் கொள்ளும் குறுக்கு வழி தானே மக்களுக்குப் பிடிக்கும்?:)))
அந்த வழியைச் சொல்லாத சமணம், பெளத்தம், வைணவம் போன்றவை Minority சமயங்களே:)
சமணம் போலவே, சில ஆழ்வார்களின் ஈரத் தமிழும் இப்படியே!
Magic/ மந்திரங்கள் = இல்லை!
என்றோ செத்தவரை அதே வயதில் மீட்டல்,
தண்ணீரில் தங்கம் எடுத்தல்
- போன்ற பிரசாரக் "கதைகள்", ஆழ்வார்களிடமும் இல்லை! சமணர்களிடமும் இல்லை!
"இறப்பே இல்லாத வீட்டில் கடுகு வாங்கி வா-புத்தர்" கதை அனைவரும் அறிந்தது தானே?
இப்படிச் சொன்னா, அப்பறம் எப்படி, மக்கள் சமண-பெளத்தத்திடம் வருவாங்க? போங்கய்யா ஒங்களுக்கு மேஜிக்கே தெரியல:)))
-----------
மாற்றுச் சமயத்தவரை, ஒவ்வாரு பத்தாம் பாட்டிலும் வைத்து நையப் புடைக்கும் போக்கு, சமணத்தில் இல்லவே இல்லை!!
அந்த ஒன்றுக்காகவே, சமணத்தில் ஈரங் கால் பட்டு நிற்கிறேன், பிறவிச் சைவனாகிய நான்!
எனக்கு முருகக் காதல்/ காமம் அடி மனசிலே ஒளிஞ்சிருக்கும் என்றாலும்...
ஆழ்வார்களின் ஈரத் தமிழுக்கும், சமணத்தின் மேன்மைத் தமிழுக்கும் =
சமயம் கடந்து நிற்கவே எனக்கு விருப்பம்!
* சமணம் எங்கு சென்றாலும், தொன் மரபைச் சிதைப்பதில்லை!
* தன் நெறியும் "காணீர்" என்றே அறிமுகம் செய்கிறது!
* குறிப்பாகச், சங்கத் தமிழ் மரபைச், சமணம் சிதைக்கவே இல்லை!!!!!
= இந்த ஒன்றுக்காகவே, சமண நெறி, என் மனத்துக்கு மிகவும் பிடித்தமானது!
= மேன்மை கொள் சமண நீதி ஓங்குக, தமிழ் உலகமெல்லாம்!
சமணர் செய்த தொண்டு என்றென்றும்
போற்றுதலுக்குரியது
Post a Comment